புதினுக்கு எதிராக செயல்படுவதே ரஷியாவுக்கு ஆதரவாக செயல்படுவது ஆகும் – கேரி கேஸ்பரோவ்

மாஸ்கோ : உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 3 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த போர் காரணமாக ரஷியாவிற்கு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ரஷியாவின் செயல்பாடுகளை அந்நாட்டை சேர்ந்த முன்னாள் உலக செஸ் சாம்பியன் கேரி கேஸ்பரோவ், முன்னாள் எண்ணெய் அதிபர் மிகெயில் கோதோர்வ்ஸ்கி ஆகியோர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
இதையடுத்து ரஷிய நீதித்துறை அமைச்சகம், அவர்களை, ‘வெளிநாட்டு உளவாளிகள்’ என்ற பட்டியலில் சேர்த்துள்ளது. உக்ரைன் மற்றும் மனித உரிமைகள் அறக்கட்டளைகள் மூலம் அவர்களுக்கு நிதி வருவதாக ரஷியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கேரி கேஸ்பரோவ் கூறுகையில், ரஷியாவின் நீதித்துறை அமைச்சகம் என்பது புதினின் தலைமையில் முரண்பாடான துறையாக இருக்கிறது. கிழக்கு ஜெர்மனியில் புதின் அவரது நண்பர்களுடன் உளவு வேலை பார்த்துகொண்டிருந்தபோதும், புனித பீட்டர்பெர்க்கில் உள்ள மக்களிடம் இருந்து திருடிக்கொண்டிருந்தபோதும் நான் எனது நாட்டின் பிரதிநிதியாக இருந்தேன். புதினுக்கு எதிராக செயல்படுவதே ரஷியாவுக்கு ஆதரவாக செயல்படுவது ஆகும் என்று தெரிவித்துள்ளார்.