மருமகளை எதிர்த்து போட்டியிட மறுத்து தேர்தலில் இருந்து விலகிய முன்னாள் முதல்-மந்திரி

பனாஜி : கோவா சட்டசபைக்கு வரும் 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், பாஜக, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிடவுள்ளன. பாஜகவும், காங்கிரசும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருவதால் கோவா அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது.
கோவா காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதாப் சிங் ரானே, 6 முறை கோவா முதல்-மந்திரியாக செயல்பட்டுள்ளார். பிரதாப் சிங் ரானே கோவாவின் போரியம் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். போரியம் தொகுதியில் பிரதாப் சிங் 1972 முதல் தொடர்ந்து 11 முறை வெற்றி பெற்றுள்ளார். வரும் சட்டசபை தேர்தலிலும் போரியம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரதாப் சிங் களமிறங்க இருந்தார்.
இந்நிலையில், பிரதாப் சிங்கின் மகன் விஷ்வஜித் மற்றும் மருமகள் திவ்யா ரானே ஆகிய இருவரும் பாஜக கட்சியில் உள்ளனர். போரியம் தொகுதியில் பிரதாப் சிங்கிற்கு எதிராக அவரது மருமகள் திவ்யா ரானேவையே பாஜக களமிறங்கியுள்ளது. இதனால், காங்கிரசை சேர்ந்த பிரதாப் சிங் பாஜக வேட்பாளரான தனது மருமகள் திவ்யா ரானேவை போரியம் தொகுதியில் எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவானது. இதனால், வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.