சத்துக்கள் நிறைந்த அரிசி காய்கறிகள் சூப் செய்து பாருங்கள்

சென்னை; உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதில் காய்கறிகள் முதலிடம் பிடிக்கின்றன. பல குழந்தைகள் சாப்பாட்டில் காய்கறிகளை ஒதுக்கு விடுவார்கள். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு சத்து நிறைந்த அரிசி காய்கறி சூப் செய்து தாருங்கள். தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு அரிசி காய்கறி சூப் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்: புழுங்கலரிசி – 1 டேபிள் ஸ்பூன், ஏதாவது கலந்த காய்கறிகள் – 1/4 கப் இஞ்சி பூண்டு விழுது – 1/4 டீஸ்பூன், வெங்காயம் – 1, தக்காளி – 1, புதினா, கொத்தமல்லித்தழை – சிறிது, தேங்காய்ப்பால் – 1/2 கப், வெண்ணெய் – 2 டீஸ்பூன் + எண்ணெய் – 1 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – 1 சிட்டிகை, உப்பு – தேவைக்கு.
செய்முறை: அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கிகொள்ளவும். குக்கரில் வெண்ணெய், எண்ணெயை ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கிய பின்னர் கரம் மசாலாத்தூள், வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை போட்டு வதக்கவும்.
வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும். இத்துடன் ஊற வைத்த அரிசியை போட்டு நன்றாக வதக்கி 3 கப் தண்ணீர், உப்பு போட்டு கொதித்ததும் குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கவும். விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து தேங்காய்ப்பால் சேர்த்து அடுப்பில் வைத்து கொதி வரும் முன் இறக்கி பரிமாறவும். இப்போது சத்தான சுவையான அரிசி காய்கறி சூப் ரெடி.