மூணாறு: கேரளாவின் முக்கியமான பண்டிகையான ஓணம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, கேரள அரசு போக்குவரத்து கழகம் (KSRTC) சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. பண்டிகை விடுமுறை காலங்களில் குறைந்த செலவில் சுற்றுலாவை அனுபவிக்க, ‘பட்ஜெட் சுற்றுலா’ திட்டத்தின் கீழ் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

வயநாடு, மலப்புரம், எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு டெப்போக்களில் இருந்து மூணாறுக்கு சுற்றுலாப் பஸ்கள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பழைய மூணாறு பஸ் நிலையத்தில் இருந்து காந்தலூர், வட்டவடை, ஆனகுளம், சதுரங்கப்பாறை போன்ற முக்கிய இடங்களுக்கு சிறப்பு சுற்றுலா பஸ்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சேவை தினமும் காலை 9 மணிக்கு புறப்பட்டு, மாலை 6 மணிக்குள் திரும்பும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் ஒரு நாளுக்குள் பல இடங்களை சுலபமாக பார்க்க முடியும். ஓணப் பண்டிகைக்காக மட்டுமே இயக்கப்படும் இந்த பஸ்களுக்கு ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பொதுமக்கள் கூடுதல் தகவல்களுக்கு 91889 33771, 94475 77111 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தில் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து, அரசு போக்குவரத்து கழகத்தின் வருவாயை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.