குற்றாலத்தில் சோப்பு, ஷாம்பு பயன்படுத்திய 398 சுற்றுலா பயணிகளுக்கு அபராதம்
தென்காசி,
குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் குவிந்தனர். அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். அருவிகளில் குளிக்கும்போது சோப்பு, ஷாம்பு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் சிலர் சோப்பு மற்றும் ஷாம்புகளை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பயன்படுத்துபவர்களை நகராட்சி நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் கண்காணித்து தலா ரூ.100 அபராதம் விதிக்கின்றனர். நேற்று முன்தினம் வரை 398 சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு மொத்தம் ரூ.39 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே அருவிகளில் குளிப்பவர்கள் சோப்பு, ஷாம்பு பயன்படுத்த வேண்டாம், துணிகளை துவைக்க வேண்டாம், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.