தொடர்ந்து 2 போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியது வங்கதேசம்
மிர்பூர்: 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வங்கதேசம் 2-0 என கைப்பற்றியது. இந்திய கிரிக்கெட் அணி மிர்பூரில் 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வங்கதேசம் சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், மிர்பூரில் நடந்த முதல் போட்டியில் வங்கதேசம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில் இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்பூரில் இன்று நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி தொடக்க வீரர்களாக அனமுல் ஹக் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் களம் இறங்கினார்கள். அனமுல் ஹக் 11 ரன்களிலும், லிட்டன் தாஸ் 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய நஜ்முல் ஹொசைன் சந்து 21 ரன்களுடனும், ஷகிப் அல் ஹசன் 8 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக பங்களாதேஷ் அணி தடுமாற, பின்னர் மஹமதுல்லா மற்றும் மெஹ்தி ஹசன் மிராஸ் ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய மகமதுல்லா அரை சதம் அடித்து 77 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் நிதானமாக விளையாடிய மெஹிதி ஹசன் மிராஸ் சதம் அடித்தார். இறுதியில் வங்கதேச அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது.
இந்தியா சார்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. ரோஹித் சர்மா காயம் காரணமாக தொடக்க ஆட்டக்காரராக விளையாடவில்லை. ஷிகர் தவானும் விராட் கோலியும் களமிறங்கினர்.விராட் கோலி 5 ரன்களும், தவான் 8 ரன்களும் எடுத்த நிலையில் இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல் ஆகியோர் அரை சதம் அடித்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களிலும், அக்சர் படேல் 56 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ரோஹித் சர்மா காயத்துடன் வெளியேறினார்.அவர் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து அரை சதத்தை கடந்தார்.. கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை முஸ்தபிசுர் ரஹ்மான் வீசினார்.ஆனால் அவரால் 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வங்கதேச அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை வங்கதேசம் 2-0 என கைப்பற்றியது