முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூர்,ஜப்பான் செல்லும் மு.க.ஸ்டாலின்
சென்னை: முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சிங்கப்பூர் செல்கிறார். உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறவுள்ளது. இதையொட்டி சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு முதல்வர் சென்று முதலீடுகளை ஈர்க்கிறார்.
இன்று காலை விமானம் மூலம் சிங்கப்பூர் செல்லும் ஸ்டாலின், மாலை சிங்கப்பூர் சென்றடைகிறார். புதன்கிழமை நடைபெறும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின், சிங்கப்பூரின் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த 350 தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த சந்திப்பின் போது தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என கூறப்படுகிறது.
இதையடுத்து, வரும் 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஜப்பானில் தங்கி இருக்கும் முதல்வர் ஸ்டாலின், முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க உள்ளார். 9 நாள் சிங்கப்பூர், ஜப்பான் பயணத்தை முடித்துக் கொண்டு, வரும் 31ம் தேதி சென்னை திரும்புகிறார்.
முன்னதாக, கடந்த ஆண்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழு துபாய் மற்றும் அபுதாபிக்கு தொழில் முதலீடுகளை ஈர்த்தது. 6 தொழில் நிறுவனங்களுடன் 6 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஆயிரம் கோடி அமெரிக்க டாலராக உயர்த்த, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.