சென்னையில் நாளை மாலை 5 மணிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெறவுள்ளது. பாகிஸ்தானின் அத்துமீறல்களுக்கு எதிராகவும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கத்தில், காமராஜர் சாலையிலிருந்து நேப்பியர் பாலம் அருகில் உள்ள போர் நினைவுச் சின்னம் வரை இந்த பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணியில் அமைச்சர் உள்ளிட்டோர், முன்னாள் படைவீரர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என சுமார் 25,000 பேர் பங்கேற்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் சென்னையில் முக்கிய சாலைகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.திருவான்மியூரில் இருந்து பாரீசை நோக்கி காமராஜர் சாலை வழியாக செல்லும் வாகனங்கள் தடை செய்யப்படும். அவை மாற்றுப் பாதைகளாக சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, அண்ணா சாலையை பயன்படுத்த வேண்டும். அதேபோல் பாரிஸில் இருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்களும் தேனாம்பேட்டை, காந்தி மண்டபம் வழியே செல்ல வேண்டும். அண்ணா சாலையில் இருந்து வரும் எம்.டி.சி பேருந்துகள் வெலிங்டன் சந்திப்பு, ஜிபி சாலை, ராயப்பேட்டை, மயிலாப்பூர் வழியாக மத்திய கைலாஷ் சந்திப்பை நோக்கிச் செல்லலாம்.

கிரீன்வேஸ் பாயிண்டிலிருந்து வரும் வாகனங்கள் ஆர்.ஏ.புரம், டிடிகே சாலை வழியே செல்ல வேண்டும். வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 12 மணி முதல் இரவு 9 மணி வரை தடை செய்யப்படும். பேரணியில் பங்கேற்கும் வாகனங்களுக்கு காந்தி சாலை அருகிலும், தீவுத்திடல் மைதானம், ராணி மேரி கல்லூரி, லூப் சாலை உள்ளிட்ட இடங்களிலும் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
விபி வாகனங்கள் கொடிமர இல்ல சாலை வழியாக தீவுத்திடல் மைதானத்துக்குள் நுழையலாம். பொதுமக்கள் காமராஜர் சாலையை தவிர்த்து மாற்றுப்பாதைகளை பயன்படுத்த வேண்டும். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பதன் மூலம் நிகழ்வு அமைதியாக நடைபெறும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.