நடிகர் வடிவேலு 2011 ஆம் ஆண்டு பிறகு சினிமாவில் அதிகம் காணப்படவில்லை. இடையே சில படங்களில் தோன்றினாலும், அது ரசிகர்கள் மத்தியில் பெரிதாக கவனிக்கப்படவில்லை. தனது வெற்றிப் படமான இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமான அவர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்தப் படத்தில் இருந்து விலகினார். இதன் விளைவாக தயாரிப்பாளர் சங்கம் அவரது மீது ‘ரெட் கார்டு’ விதித்தது.

இந்த இடைவேளையின் போது, சில நேர்காணல்களில் இயக்குநர்கள் சிம்புதேவன் மற்றும் ஷங்கர் குறித்து விமர்சனங்கள் கூறியதாலும், அவர் மீதான எதிர்மறையான நிலைமை தொடர்ந்தது. தற்போது அவர் மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். மாமன்னன் திரைப்படத்தில் ஒரு வித்தியாசமான வேடத்தில் நடித்து வரவேற்பு பெற்றாலும், தனது அடையாளமான நகைச்சுவை கதாபாத்திரங்களில் இன்னும் முழுமையான கம்பேக் கொடுக்க முடியவில்லை.
தற்போது, சுந்தர் சி இயக்கும் கேங்கர்ஸ் என்ற படத்தில் வடிவேலு நடித்துள்ளார். இந்த படம் தான் அவர் முழுமையாக திரும்பும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தனது சினிமா ஆரம்ப காலத்தைப் பற்றியும் அவர் மனம் திறந்துள்ளார். “நான் சினிமாவுக்கு வந்த போது, ராஜ்கிரண் சார் ஆஃபிஸில்தான் தங்கி இருந்தேன். அவருடைய படங்களில்தான் முதலில் நடித்தேன். பின்னர் ஆர். வி. உதயகுமார் சார் படங்களில் வாய்ப்பு கிடைத்தது. தேவர் மகன் படம் வரை நான் ராஜ்கிரண் சார் ஆஃபிஸில்தான் தங்கி இருந்தேன். சினிமா கம்பெனிகளிடம் அந்த ஆஃபிஸ் முகவரி, டெலிபோன் நம்பரைத்தான் கொடுப்பேன். ராஜ்கிரண் சார் எனக்குக் கடவுள் மாதிரியே” என்று உணர்ச்சிப்பூர்வமாக கூறியுள்ளார்.