மும்பையில் நடைபெறும் 2025 ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக தங்கள் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு அணியிலும் உள்ள வெளிநாட்டு வீரர்கள், தங்கள் சொந்த நாடுகளுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் இந்த கோரிக்கையை தெரிவித்துள்ளனர்.தரம்சாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செய்ததாக ஐபிஎல் தலைவர் அருண் துமால் கூறியுள்ளார்.

அந்த பகுதியில் விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதால், வீரர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்குழுவினரை ரயிலில் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டது.இந்த சூழ்நிலையில், ஐபிஎல் நிர்வாகம் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஐபிஎல் தொடரை தொடர்ந்து நடத்த வேண்டுமா, தற்காலிகமாக நிறுத்த வேண்டுமா, அல்லது வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டுமா என்ற முடிவுகள் குறித்து அந்த கூட்டத்தில் பேசப்படும்.
இந்திய அரசின் ஆலோசனைக்குப் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகே மட்டுமே பதற்றம் நிலவுகிறது என்பதையும் பிசிசிஐ வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.இந்நிலையில், வெளிநாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்கும் வகையில், அவர்களை தங்கள் நாடுகளுக்கு அனுப்பும் திட்டம் தயார் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இவ்வாறான சூழ்நிலையில், ஐபிஎல் தொடரின் எதிர்காலம் குறித்து ரசிகர்களிடையே பெரும் கவலை உருவாகியுள்ளது.ஐபிஎல் போட்டிகள் இடைநிறைவு அல்லது இடமாற்றம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சிக்கலான சூழ்நிலையை நிர்வாகம் எவ்வாறு சமாளிக்கிறது என்பதை பொறுத்தே தொடரின் திசையும் முடிவும் அமையும்.