இந்தியாவில் கோடிக்கணக்கானோர் தினசரி UPI பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் வங்கி அமைப்புகள் மற்றும் UPI தளங்களுக்கு பெரும் சுமை ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில், NPCI எனப்படும் தேசிய பணப்பட்டுவாடா கழகம் ஆகஸ்ட் 1 முதல் சில புதிய விதிகளை கொண்டு வர உள்ளது. இந்த மாற்றங்கள், Google Pay, PhonePe மற்றும் Paytm போன்ற செயலிகளின் செயல்பாடுகளை நேரடியாக பாதிக்கக்கூடும்.

தொடர்ந்து அதிகரித்து வரும் பரிவர்த்தனைகளால், UPI அமைப்பில் தொழில்நுட்ப சிக்கல்கள் தோன்றத் தொடங்கியுள்ளன. கடந்த மாதங்களில் சில வங்கிகள் முறையை தவறாக பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏப்ரல் 12 அன்று, UPI சேவை 5 மணி நேரம் முடங்கியதும், மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். ஒரு நிமிடம் சேவை முடங்கினாலும், சுமார் 4 லட்சம் பேர் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒவ்வொரு நொடியும் சுமார் 7,000 பரிவர்த்தனைகள் செயலாக்கப்படுகின்றன. UPI பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை தற்போது 40 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையை சீர்செய்யும் நோக்கில், NPCI புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. முக்கியமாக, API பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
ஆகஸ்ட் 1 முதல், பயனர்கள் ஒரு நாளில் 50 முறைதான் தங்களது இருப்பை (balance) சரிபார்க்க முடியும். அதேபோல், ஒரே மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளின் இருப்பை 25 முறைக்கு மேல் பார்க்க முடியாது. மேலும் தானியங்கி கட்டணங்களை உச்ச நேரங்களைத் தவிர்த்து மட்டுமே செலுத்த முடியும்.
காலை 10 மணி, மதியம் 1 மணி மற்றும் மாலை 5 மணி போன்ற நேரங்களில் மட்டுமே இந்த பணப்பரிவர்த்தனைகள் செயல்படும். இந்த மாற்றங்கள் UPI பயன்பாட்டின் சீரான செயல்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் அமையும். NPCI அனைத்து வங்கிகளுக்கும் மற்றும் பணம் செலுத்தும் செயலிகளுக்கும் இந்த விதிகளை ஜூலை 31க்கு முன்னதாகவே நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.