சென்னை: தங்கம் விலை பவுனுக்கு ரூ.68 ஆயிரத்தை தாண்டி மேலும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8510 ஆகவும், பவுன் ரூ.680 அதிகரித்து ஒரு பவுன் ரூ.68,080 ஆகவும் உள்ளது.
இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.113-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை தினமும் பல புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில், ”அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள இறக்குமதி வரி நாளை முதல் அமலுக்கு வருவதால், வர்த்தக போர் தீவிரமடைந்துள்ளது.இதனால், தங்கம் மீதான முதலீடு அதிகரித்துள்ளது.தங்கம் விலை உயர்வுக்கு, இதுவே காரணம் என, சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்தார்.

மேலும், இந்த வர்த்தகப் போரால் சீனா, ரஷ்யாவை ஆதரிக்கும் நாடுகள் தங்களிடம் உள்ள அமெரிக்க டாலரை கையிருப்பில் விற்று தங்கம் வாங்குகின்றன. இதன் காரணமாக சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. மேலும், அமெரிக்க டாலரின் மதிப்பும் குறைந்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால் தங்கத்தின் விலை இன்னும் உச்சத்தை காண வாய்ப்புள்ளது. மேலும், பவுன் ரூ.80,000 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.