தேனி மாவட்ட விவசாயிகள், இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பயிர் சேதத்திலிருந்து பாதுகாப்பு பெற, பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் உடனே விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் 2025–26ஆம் ஆண்டில் தேனி மாவட்டத்தில் காரீப், சம்பா மற்றும் ராபி பருவங்களுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தும் நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

திட்டத்தின் கீழ் காரீப் பருவத்தில் நெல், சோளம், நிலக்கடலை, எள், துவரை, பருத்தி, வாழை, வெங்காயம், தக்காளி, கத்தரி, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களுக்கு 61 பிர்காக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம்பா பருவத்தில் நெற்பயிருக்கு 14 பிர்காக்கள் மற்றும் ராபி பருவத்தில் மக்காச்சோளம், வாழை, முட்டைகோஸ், கொத்தமல்லி உள்ளிட்டவை சேர்த்து 27 பிர்காக்கள் கீழ் திட்டம் செயல்படவிருக்கிறது. இது மாவட்டத்தின் அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடைமுறையில் இருக்கும்.
இந்த திட்டத்தில் கடன் பெறும் விவசாயிகள் தாங்கள் கடன் பெறும் வங்கிகள் மூலமாக கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையம் அல்லது கூட்டுறவு சங்கங்கள் மூலம் விருப்பத்தின் பேரில் பதிவு செய்யலாம். பதிவு செய்யும் போது, விண்ணப்பம், கட்டணம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் சிட்டா மற்றும் அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் நகல் ஆகியவை இணைக்கப்பட வேண்டும். பதிவு செய்த பின் காப்பீட்டுத் தொகை செலுத்தி ரசீதை பெற்றுக் கொள்ளலாம்.
காரீப் பருவ பயிர்களுக்கு முக்கியமான கடைசி தேதிகள் வரிசையாக – நெல் மற்றும் எள்: ஜூலை 31, நிலக்கடலை: ஆகஸ்டு 30, துவரை மற்றும் வாழை: செப்டம்பர் 16, மக்காச்சோளம்: செப்டம்பர் 30, கத்தரி, தக்காளி, வெங்காயம்: செப்டம்பர் 1, மரவள்ளி கிழங்கு: செப்டம்பர் 16 ஆகும். மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம்.