புது டெல்லி: தலைநகர் டெல்லியில் நேற்று ரயில்வே கண்காட்சி தொடங்கியது. இதில் 15 நாடுகளைச் சேர்ந்த 450 நிறுவனங்கள் பங்கேற்றன. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கண்காட்சியைத் தொடங்கி வைத்து கூறியதாவது:- வந்தே பாரத் ரயில்களின் தரம் மற்றும் வேகம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. தற்போது, வந்தே பாரத் 3.0 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்கள் 52 வினாடிகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் கொண்டவை. ஐரோப்பிய நாடுகளின் ரயில்களுடன் ஒப்பிடும்போது வந்தே பாரத் ரயில்கள் மிகவும் சிறந்தவை. இந்த ரயில்கள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக உள்ளன. வந்தே பாரத் 4.0 ரயில்கள் அடுத்த 18 மாதங்களில் தயாராகிவிடும். இந்த ரயில்கள் மணிக்கு 350 கிமீ வேகத்தில் இயக்கும் திறன் கொண்டவை. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த ரயில்கள் மணிக்கு 320 கிமீ வேகத்தில் இயக்கப்படும்.

கடந்த 11 ஆண்டுகளில், 35,000 கி.மீ. புதிய தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 46,000 கி.மீ. மின்மயமாக்கல் பணிகள் நிறைவடைந்துள்ளன. 2047-ம் ஆண்டுக்குள், 7,000 கி.மீ. சிறப்பு ரயில் பாதைகள் அமைக்கப்படும். இந்த பாதைகளில் ரயில்கள் மணிக்கு 350 கி.மீ வேகத்தில் இயக்க முடியும். இந்தியாவில் தயாரிக்கப்படும் ரயில் என்ஜின்கள் பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 20 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். சரக்கு ரயில் போக்குவரத்தைப் பொறுத்தவரை இந்தியா உலகின் இரண்டாவது பெரிய நாடு. புல்லட் ரயில் திட்டம் வேகம் பெற்று வருகிறது. அமிர்த பாரத் மிஷனின் கீழ் நாடு முழுவதும் 1,300-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் புதிய தோற்றத்தைப் பெறுவதாக அவர் கூறினார்.