சென்னை: கேழ்வரகு பயன்பாடு அதிகரிக்காததால், தமிழகத்தில் அதன் விலை ஒரு கிலோ 40 ரூபாயை தாண்டவில்லை என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த மதுரை, திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் வெங்கடேஷ் கூறியதாவது:
தமிழகத்தில் 64,000 ஹெக்டேரில் கேழ்வரகு சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 3 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக மொத்த கொள்முதல் விலை சராசரியாக 36 முதல் 40 ரூபாய்க்குள் தான் இருக்கிறது. அதாவது, 40 ரூபாயை தாண்டாத சூழல்தான் நிலவுகிறது.
மக்களிடையே கேழ்வரகு பயன்பாடு குறைந்ததே இதற்கு காரணம். சிறுதானியங்கள் பற்றி விழிப்புணர்வு அதிகரித்தாலும் அதை எப்படி சமைத்து சாப்பிடுவது என்பது பலருக்கும் தெரியவில்லை.
சந்தையில் புதுப்புது உணவு வகைகள் அறிமுகமாவதால், சத்துகள் மிகுந்த கேழ்வரகு அதோடு போட்டி போட வேண்டிய சூழல் உள்ளது.
கேழ்வரகுக்கு அதிக விலை கிடைத்தால் விற்பனை செய்யலாம் என்று விவசாயிகள் இருப்பு வைத்துள்ளனர். ஆனால், பெரிய அளவுக்கு விலை உயராததால் அவர்கள் கவலையடைந்துள்ளனர். இதனால், கேழ்வரகு சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.