புவனேஸ்வர்: ஐந்து நாள் பயணமாக ஒடிசா வந்துள்ள சக்திகாந்த தாஸ், தலைநகர் புவனேஸ்வரில் நேற்று (ஆகஸ்ட் 30) நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “யுபிஐ ஏற்கனவே பல நாடுகளில் QR குறியீடுகள் மற்றும் விரைவான கட்டண முறைகளுக்கான இணைப்புகளுடன் கிடைக்கிறது. இது தொடர்பாக பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது உலக அளவில் மேலும் வளரும். எதிர்காலத்தில் சர்வதேசமயமாக்கப்படும் என எதிர்பார்க்கிறோம்,” என்றார்.
முன்னதாக கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 28, 2024) மும்பையில் ஒரு நிகழ்ச்சியில், சக்திகாந்த தாஸ், “பூடான், நேபாளம், இலங்கை, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரீஷியஸ், நமீபியா, பெரு, பிரான்ஸ் மற்றும் பிற நாடுகள் UPI நெட்வொர்க் மற்றும் ரூபே கார்டுகளை ஏற்றுக்கொண்டன.
இது இந்தியாவின் முன்முயற்சிகளை உலகம் ஏற்றுக்கொண்டதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது,” என்றார்.
இந்தியாவில் 2016-ல் அறிமுகப்படுத்தப்பட்ட UPI, நாட்டில் பணப் பரிவர்த்தனை செயல்முறையில் புரட்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் யுபிஐ சேவையை மேம்படுத்தும் வகையில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, UPI சேவையில் குரல் பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, UPI மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண் அல்லது UPI எண்ணை தட்டச்சு செய்ய வேண்டியதில்லை.
அவர்கள் குரல் மூலம் நுழைந்து பரிவர்த்தனை செய்யலாம்.