சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கங்குவா’.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் படம். அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என்பதால், கடந்த சில மாதங்களாக இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அக்டோபர் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் அதே தேதியில் ரஜினியின் வேட்டையன் படமும் வெளியாகும் என அறிவித்துள்ளனர். அதனால் இரண்டில் ஒரு படம்தான் வெளியாகும் என்ற நிலை இருந்தது.
இந்நிலையில், கார்த்தி நடித்துள்ள ‘மெய்யழகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ‘மெய்யழகன்’ படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, ‘கங்குவா’ படத்தின் வெளியீடு குறித்தும் குறிப்பிட்டார்.
அதில், “இரண்டரை ஆண்டுகளாக 1000-க்கும் மேற்பட்டோர் உழைத்து ஒரு சிறந்த படத்தை தமிழ் சினிமாவுக்கு வழங்கியுள்ளனர். வெயிலும், மழையும், மலை உச்சியும், கடலும், தண்ணீரும், இவ்வளவு உழைப்பும் வீண் போகாது என்ற நம்பிக்கை இருக்கிறது.
அதற்கு அன்பையும் மரியாதையையும் நிச்சயம் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. வரும்போது வரட்டும், நான் தான் சொல்கிறேன். ‘வேட்டையன்’ படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகிறது.
ரஜினி சார் சீனியர். நான் பிறந்ததும் நடிக்க வந்தவர். ஏறக்குறைய 50 வருடங்களாக தமிழ் சினிமாவின் அடையாளமாக இருந்தவர். சீனியர் படம் வந்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
‘கங்குவா’ ஒரு குழந்தை. குழந்தை பிறக்கும் அன்று தான் பிறந்த நாள். அந்த பிறந்தநாளை கொண்டாட ரசிகர்கள் என்னுடன் இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
‘கங்குவா’ படக்குழுவினருக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள். அந்தப் படத்தின் ரிலீஸ் நாள் முக்கியமான நாளாக இருக்கும்” என்று சூர்யா தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.