புதுடெல்லி: அயோத்தி தீர்ப்புக்காக கடவுள் முன் அமர்ந்து பிரார்த்தனை செய்ததாக தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள தனது சொந்த ஊருக்குச் சென்றார். அங்கு கூட்டத்தினரிடையே அவர் பேசியதாவது:-
ஒரு சில வழக்குகளை தீர்ப்பதற்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பல்வேறு கருத்துகளை கூறுகின்றனர். ஆனால் அது எப்போதும் தீர்வு அல்ல. ராம ஜென்மபூமி-பாபர் மசூதி சர்ச்சையின் போது எனக்கும் இதே போன்ற சம்பவம் நடந்தது. ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பிரச்னைக்கு தீர்வு காண பிரார்த்தனை செய்தேன். தீர்ப்பை அறிவிப்பதற்கு முன், கடவுள் நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு வழியைக் கண்டுபிடித்தேன்.
ஏனெனில் இந்த குழப்பம் 3 மாதங்களாக தொடர்ந்தது. இந்த குழப்பத்தை தீர்க்க நான் தெய்வத்தின் முன் அமர்ந்து தீர்வுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்தேன். அதன் அடிப்படையில் தீர்வு காணப்பட்டது. நான் தவறாமல் பிரார்த்தனை செய்கிறேன். என்னை நம்புங்கள், உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், கடவுள் எப்போதும் உங்களுக்காக ஒரு வழியை உருவாக்குவார். இவ்வாறு அவர் பேசினார்.
நவம்பர் 9, 2019 அன்று, அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி சந்திரசூட் உட்பட 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, 70 ஆண்டுகால சர்ச்சைக்கு முடிவு கட்டியது. இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், ராமர் சிலை பிரதிஷ்டை விழா, கடந்த ஜனவரி 22-ம் தேதி நடந்தது. தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் சந்திரசூட், கடந்த ஜூலை மாதம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார்.