சென்னை: நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா பஞ்சநதிகுளத்தில் உள்ள அருணாசல ஞானதேசிக மடம், பொது சாதுக்கள் மடம், தஞ்சாவூர் பால்சாமி, சங்கரசுவாமி மடங்களுக்கு அறநிலையத் துறை பொறுப்பு அலுவலரை நியமித்தது. இதை எதிர்த்து நித்யானந்தா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, அறநிலையத்துறையின் உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து நித்யானந்தா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சி.குமரப்பன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா சார்பில் வக்கீல் கச்சன் சுவாமிநாதன் ஆஜராகி, ‘‘ஏற்கனவே அந்த மடங்களுக்கு மடாதிபதியாக இருந்த ஆத்மானந்தா, இந்த மடங்களின் மடாதிபதியாக நித்யானந்தாவை நியமித்துள்ளார்’’ என்றார்.
இதற்கு பதில் அளித்த அரசு சிறப்பு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர். அறநிலையத் துறை சார்பில் ஆஜரான அருண் நடராஜன் வாதிடுகையில், ”தற்போது நித்யானந்தா இந்தியாவில் இல்லை. அவர் தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த மடங்களுக்கு அவர் எந்த வகையிலும் உரிமை கோர முடியாது. எனவே, இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ”நித்யானந்தா, பிரேமானந்தா, ஆத்மானந்தா போன்ற அந்தணர்களால் தான் பிரச்னை. நித்யானந்தா தற்போது எந்த நாட்டில் இருக்கிறார் என்று தெரியவில்லை. மடத்துக்குச் சொந்தமான சொத்துக்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இந்த மடங்களின் நிர்வாகத்தை கையகப்படுத்தி முறைப்படுத்த அறநிலையத்துறைக்கு அதிகாரம் உள்ளதால், பொறுப்பு அலுவலரை நியமித்து அறநிலையத்துறை பிறப்பித்த உத்தரவில் தவறில்லை. நித்யானந்தா மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது,” என, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.