பெங்களூரு: “பெங்களூருக்கு இரண்டாவது விமான நிலையம் தேவை. எங்கு அமைப்பது என்பது குறித்து, முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” என, கனரக தொழில் துறை அமைச்சர், எம்.பி.பாட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
பெங்களூரில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை. தற்போது பெங்களூரு சர்வதேச விமான நிலைய ஆணையத்துடனான ஒப்பந்தத்தின்படி, 150 கி.மீ.க்குள் வேறு எந்த விமான நிலையமும் கட்டக்கூடாது என்ற நிபந்தனை உள்ளது. இந்த ஒப்பந்தம் 2033 வரை அமலில் இருக்கும்.
உடனடியாக பணிகள் தொடங்கினால், அடுத்த ஒன்பது ஆண்டுகளில் புதிய விமான நிலையம் சாத்தியமாகும். முதல்வருடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும். பெங்களூரு தெற்கு, கனகபுரா பகுதிவாசிகள் புதிய விமான நிலையம் அமைக்க வலியுறுத்தி வருகின்றனர். நிலம் அடையாளம் காணப்பட்ட பின், கையகப்படுத்துதல், இழப்பீடு வழங்குதல் போன்றவற்றை செய்ய வேண்டும்.
மும்பையில் உள்ள இரண்டு விமான நிலையங்களுக்கும் இடையே 36 கிமீ தூரம் மட்டுமே உள்ளது. இதேபோல், நியூயார்க் மற்றும் லண்டன் இரண்டு விமான நிலையங்களும் குறுகிய தூரத்தில் உள்ளன. கர்நாடகாவில் இரண்டாவது விமான நிலையத்தை அறிவித்த பிறகு, ஓசூரில் புதிய விமான நிலையம் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக சாதக பாதகங்கள் ஆய்வு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.