சென்னை: காதலர் தினத்தை முன்னிட்டு கோயம்பேடு பூ மார்க்கெட்டில் ரோஜா மலர்களின் வரத்து அதிகரித்துள்ளதால் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. காதலர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை ஓசூர், பெங்களூரு, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வண்ண ரோஜாக்கள் லாரிகளில் கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. சாதாரண நாட்களில், 5 முதல் 7 டன் ரோஜாக்கள் கொண்டு வரப்படும். தற்போது காதலர் தினத்தையொட்டி ரோஜாக்களின் வரத்து அதிகரித்து 10 டன் ரோஜாக்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டை விட பூக்களின் விலை அதிகரித்துள்ளது. தாஜ்மஹால் ரக ரோஜாக்களின் 20 பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரூ. 200 முதல் ரூ. 400, நோபல்ஸ் பிங்க் ரக ரோஜாக்கள் ரூ. 180 முதல் ரூ. 350, ராக்ஸ்டார் ஆரஞ்சு ரோஜா ரூ. 150 முதல் ரூ. 300, சிவப்பு ரோஜா ரூ. 200 முதல் ரூ. 450, ஜபுரா ரூ. 40 முதல் ரூ. 100, மற்றும் கலர் ரோஸ் ரூ. 150 முதல் ரூ. 350-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணைத் தலைவர் முத்துராஜ் கூறியதாவது:- காதலர் தினமான பிப்ரவரி 14-ம் தேதி முதல் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வியாபாரம் சூடுபிடித்துள்ளது என்றார்.