கேரளாவின் கண்ணனூர் மாவட்டத்தில் செருபுழா அருகே அமைந்துள்ள பிரபோயில் என்ற கிராமத்தில், புத்தகமே தெய்வமாக வணங்கப்படும் கோவில் உள்ளது. நவபுரம் மாதாதீத்த தேவாலயம் என அழைக்கப்படும் இந்த கோவில், 2021ம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி திறக்கப்பட்டது.
இந்த கோவிலில், மூலவராக எந்தவொரு உருவச்சிலையோ, கடவுளின் உருவமோ இல்லை. அதற்குப் பதிலாக, கல்லில் வடிக்கப்பட்ட புத்தகமே மூலவராக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த சிற்பி சந்தோஷ் மானசன் இந்த புத்தக மூலவரை வடிவமைத்துள்ளார்.
பக்தர்கள் இங்கு வந்து புத்தக மூலவரை வணங்கி, புத்தகங்களை காணிக்கையாக செலுத்துவர். வழிபாட்டிற்குப் பிறகு, அவர்களுக்கு பிரசாதமாகவும் புத்தகமே வழங்கப்படுகிறது.
இந்த கோவிலில் அர்ச்சகர்கள் எவரும் இல்லை; உண்டியலும் இல்லை. அனைத்து சமுதாயத்தினரும் வேறுபாடில்லாமல் இங்கு வழிபாடு செய்யலாம். புத்தக மூலவரில், “அறிவே கடவுள்; மதம் என்பது பரந்த சிந்தனை; பணிவு கொண்ட அறிவே சிறந்த பாதை” என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
கோவிலின் முன் மண்டபத்தில் சில ஆயிரம் புத்தகங்களை கொண்ட நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் யார் வேண்டுமானாலும் இங்கு வந்து புத்தகங்களை வாசிக்கலாம். இரண்டு ஏக்கரில் அமைந்துள்ள இந்த வளாகத்தில், மூன்று தங்கும் விடுதிகளும் உள்ளன. எழுத்தாளர்கள் இங்கு தங்கி தங்கள் எழுத்துப்பணியை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்த கோவில், எழுத்தாளர் நாராயணன் என்பவரது கனவில் உருவாகி உருவெடுத்தது. பிரபோயிலில் வசிக்கும் நாராயணன், 26 நூல்களை எழுதியவர். அவர் டுடோரியல் கல்லூரி ஒன்றையும் நடத்தி வருகிறார். தனது கனவை நனவாக்க, 60 லட்சம் ரூபாய் செலவில் புத்தக கோவிலை உருவாக்கினார்.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்திலும், தசரா விடுமுறை நாட்களிலும் கலாசார விழாக்கள் நடத்தப்படுகின்றன. இலக்கிய விவாதங்கள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், புத்தக வெளியீடுகள், கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன.
“உலகில் புத்தகமே தெய்வமாக வழிபடப்படும் ஒரே கோவில் இதுதான்” என உள்ளூர் மக்கள் பெருமிதத்துடன் கூறுகின்றனர்.