சென்னை: கிருஷ்ணரின் பரிபூரண அருள் உங்களுக்கு கிடைக்க அவர் மீது முழுமையான நம்பிக்கை வைத்து சரணாகதி அடைந்து வேண்டிய வரங்களை பெறலாம். கிருஷ்ணர் துதி குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
குருவாயூரப்பன் மீது நாராயண பட்டத்திரி பாடிய ஸ்தோத்திரம் நாராயணீயம். கிருஷ்ண ஜெயந்தி அன்று இதை படிப்பதன் மூலம் கேட்ட வரம் அனைத்தும் கிடைக்கும்.
- மஹா விஷ்ணுவே! கிருஷ்ணா! வேதத்தால் போற்றப்படுபவனே! ஆனந்த வடிவானவனே! கோபியரின் மனத்தில் இருப்பவனே! துன்பம் நீங்க, பக்தியோடு உன்னை வணங்குகிறேன்.
- மும்மூர்த்தியில் சிறந்தவரே! சர்வேஸ்வரனே! கருமை நிறக் கண்ணா! மந்திர சாஸ்திரங்களில் எங்கும் நிறைந்திருப்பவன் நீயே என்று கூறப்பட்டுள்ளது. உன்னையே ஆதிசங்கரரும் போற்றி வணங்கியுள்ளார். அந்த திருப்பாதங்களை போற்றுகிறேன்.
- தேவாதி தேவனே! அனைவருக்கும் உயிராக விளங்கும் கிருஷ்ணரே! உண்மை இல்லாதவற்றில் ஆசை கொண்டு துன்பப்படும் மனிதன், உன் திருவடியை வணங்கினால் எல்லா இன்பத்தையும் அடைவான். ஓடோடி வந்து அருள்புரிய வேண்டுமென உன்னை வணங்குகிறேன்.
- எங்கும் நிறைந்தவனே உடல், மனம், மொழியால் இந்த பூமியில் எதையெல்லாம் செய்கிறேனோ, அனைத்தையும் உன்னிடத்திலேயே சமர்ப்பிக்கிறேன். உன்னை நினைக்காத நாளில்லையே! உன் திருவடியில் சரணடைகிறேன்.
- உன்னிடம் சரணடைந்தவர்கள் எல்லா செயல்களிலும் வெற்றி பெறுவர். தேவாதி தேவனே! அப்படிப்பட்ட நல்லவர்களின் தொடர்பு எப்போதும் எனக்கு கிடைக்கட்டும். அவர்களுடைய நல்ல வார்த்தையால் பாவம் நீங்கி பக்தி பெருகட்டும்.
- ஜகந்நாதப் பெருமாளே! ஹரியே! பஞ்சபூதம், பிரபஞ்சம், பறவை, மீன், விலங்கு என எல்லாவற்றையும்,நண்பர் மட்டுமில்லாமல் எதிரியையும் கூட, உன்னுடைய வடிவமாக உள்ளத்தில் காண்கிறேன். இவ்விதம் வழிபடுவதால் பக்தியும், ஞானமும் கிடைக்கும் பேறு பெற்றேன்.
- பெருமானே! உன்னிடம் ஒன்றி விட்டதால் வழக்கமான பசி, தாகம் மறந்து போனது. கண நேரமும் உன்னை மறவாமல் செயல்களில் ஈடுபாடு கொண்டுள்ளேன். மனத்தளர்ச்சி என்பதே இல்லை. உன் அருளால், மகிழ்ச்சியோடு எங்கும் உலாவுகிறேன்.
- பெருமாளே! கலியுகத்தில் உன்பெயரைச் சொன்னாலும், உன்னைப் பற்றிப் பாடினாலும் கூட போதும்! உன் அருள் பெற்று விடலாம். இப்படி ஒரு வாய்ப்பு இருப்பதால் இந்த கலியுகத்தில் அனைவரும் பிறக்க ஆசைப்படுகின்றனர். பாக்கிய வசத்தால் பிறந்த என்னையும் உன் திருவடியில் ஏற்று கொள்வாயாக!