சென்னை: சிவபெருமானுக்கு திரிபுராரி என்று பெயர் ஏற்பட்டது எதனால் என்று தெரியுங்களா என ஆன்மீக பெரியோர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
கிருச்சமத முனிவரின் மகன் பலி தனது தந்தையின் சொல்படி விநாயகரை வேண்டு மிக கடுமையாக தவம் செய்தான். இந்த தவத்தை கண்டு மெச்சிய விநாயகர் அவன் வேண்டிக் கொண்டபடி, ‘மூவுலகத்தாரும் அவனுடைய ஆணைப்படி நடப்பார்கள்’ என்ற வரத்தைக் கொடுத்தார்.
அது மட்டுமின்றி அவன் நினைக்கும் இடமெல்லாம் சென்று வர இரும்பு, வெள்ளி மற்றும் தங்கத்தாலான மூன்று கோட்டை நகரங்களையும் கொடுத்தார். அதனால் அவன் ‘திரிபுரன்’ எனப்பெயர் பெற்றான். விநாயகர் இந்த வரங்களை பலிக்குக் கொடுத்தபோது ஒரு நிபந்தனையையும் அவனுக்கு அளித்தார்.
அதாவது அவன் ஏதாவது தவறான காரியங்கள் செய்தால் அவனது மூன்று பட்டணங்களும் அழிவதோடு, அவனும் சிவனால் அழிவான் எனவும் கூறினார். வரம் பெற்ற கர்வத்தில் பலி நாட்கள் செல்லச் செல்ல உலகங்களையும் ஆட்டிப் படைத்து தேவர்கள், ரிஷிகள் என அனைவருக்கும் பல தொல்லைகளைத் தொடர்ந்து கொடுத்தான்.
இதற்கு நிவாரணம் பெற தேவர்கள் அனைவரும் சிவனை நாடி வேண்டினார்கள். அவர் பலியுடன் போரிட்டு அவரது திரி சூலத்தால் அவனை அழிக்கும்போது அவன் அவரது திருப்பாதங்களைப் பற்றியதால் அவருடன் ஒன்றிப் போனான்.
பலியை (திரிபுரன்) சிவபிரான் அழித்ததால் அவருக்கு திரிபுராரி எனப் பெயர் வந்தது. சிவனது பலி வதம் முருகனின் சூரசம்ஹாரம் மற்றும் கிருஷ்ணரது நரகாசுரவதம் போன்றது என்கிறார்கள் ஆன்மீகப் பெரியோர்கள்.
வதைபடும் நேரத்தில் வீடு பேறு பெற்றான் பலி. இறையருளால் பலி வீடுபேறு பெற்ற நாள் ஒரு புரட்டாசி பவுர்ணமியாகி தினமாகும். எனவே பவுர்ணமி தினத்தன்று சிவபெருமானுக்கு திருவிழா வழிபாடு செய்தாலும் நெய் அல்லது எண்ணெய் திருவிளக்கு ஏற்றினாலும் எக்காலத்திலும் தீவினை அணுகாது நலம் பெறலாம்.
அன்று விரதமிருந்து, ஆலயம் சென்று வில்வார்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி சிவதரிசனம் பெற்று வருவதோடு, சிவபுராணம், திருவாசகம், தேவாரப் பாடல்களைப் பாடி வீட்டிலும் சிவபெருமானை தியானித்து வழிபட்டால் இல்லத்தில் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகும்.