மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உள்ள குருபீடத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் சிலை பிரதிஷ்டை மற்றும் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் திருநாமங்கள் சூட்டும் விழா கடந்த 4 நாட்களாக கோலாகலமாக நடந்தது.
விழாவையொட்டி ஆதிபராசக்தி சித்தர் பீடம் முழுவதும் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும், தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடந்த 16-ம் தேதி ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக, அலங்கார ஆராதனையுடன் நிகழ்ச்சி துவங்கியது.
மாலை 4 மணிக்கு ஆதார பீடம் ஏற்றுதலும், இரவு 7 மணிக்கு கோபுர கலசம் ஏற்றுதலும் நடந்தது. கடந்த 17-ம் தேதி ஆதிபராசக்தி சன்னதி அருகே உள்ள குரு பீடத்தில் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
அன்று மாலை முதல் வேள்வி பூஜையை ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார். 18-ம் தேதி காலை 2-ம் கால வேள்வி பூஜையும், மாலையில் 3-ம் கால வேள்வி பூஜையும் நடந்தது.
இன்று காலை ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உள்ள குரு பீடத்திற்கான குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. ஆன்மிக இயக்க துணைத்தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார் ஆகியோர் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி நீராடினார்கள்.
குரு பீடத்தில் உள்ள பங்காரு அடிகளார் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் மகா தீபாராதனை செய்தார். நிகழ்ச்சியில் அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ஆன்மிக இயக்க துணைத்தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார், ஸ்ரீதேவி ரமேஷ், உமாதேவி ஜெய்கணேஷ், ஊராட்சி தலைவர் அகத்தியன், கல்விக்குழும இயக்குனர்கள் ஆஷா அன்பழகன், ஸ்ரீ லேகா செந்தில்குமார், ஆதிபராசக்தி மருத்துவமனை இயக்குனர் ரமேஷ் மற்றும் ஆன்மிக இயக்க பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
கரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட பக்தர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தனர்.