சென்னை: ”இந்தாண்டு, திருவண்ணாமலை தீபத்திருவிழாவில், 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 350 கிலோ கொப்பரை மற்றும் திரிகளை எடுத்துச் செல்ல வேண்டும். 40 டன் எடையுள்ள சுமார் 450 கிலோ நெய்யையும் எடுத்துச் செல்ல வேண்டும். எனவே, தீபத்திருவிழாவை அசம்பாவிதம் ஏதும் இன்றி சிறப்பாக நடத்த, இவ்விரு பணிகளுக்கும் எவ்வளவு ஆட்களை பயன்படுத்த வேண்டுமோ, அத்தனை பேரையும் பயன்படுத்த வேண்டும் என, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்,” என, சட்டசபையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
தமிழக சட்டசபையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. முன்னதாக கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை வாரியாக அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது, பேரவை துணைத் தலைவரும், உறுப்பினருமான பிச்சாண்டி கூறியதாவது:- திருவண்ணாமலையில் வரலாறு காணாத மழைக்கு மலையில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்தனர். அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. அண்ணாமலையார் கோயிலின் முக்கிய திருவிழாவாக கார்த்திகை தீபம் நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் 2000 பேர் தீபம் திருநாளன்று மலை ஏறுகின்றனர். இந்த முறை அனுமதிக்கப்படுவார்களா? இது தொடர்பாக அரசு என்ன திட்டங்களை வகுத்துள்ளது? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:- திருவண்ணாமலை தீபத்திருவிழா சங்க காலத்திலிருந்தே நடந்து வரும் விழாக்களில் ஒன்றாகும். இந்த ஆண்டு தீபத்திருவிழாவில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் அக்டோபர் 18-ம் தேதி திருவண்ணாமலை கிரிவலப் பாதையை துணை முதல்வர் நேரடியாக ஆய்வு செய்தார்.
அதன் பின்னர் தொடர்ச்சியாக 6 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. தலைமையில் அமைச்சர் எ.வ. வேலு, நான் 2 கூட்டங்களில் பங்கேற்றேன், தலைமைச் செயலாளர், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கூட்டங்கள் நடைபெற்றன. சமீபத்தில் பெய்த கனமழையால் திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டது. திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் போது மலை உச்சியில் ஏற்றப்படும் கொப்பரை தீபம் இன்றியமையாதது. முனிவர்கள் காலம் தொட்டு நடைபெற்று வரும் இவ்விழாவை சீர்குலைக்கக் கூடாது என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவின்படி, புவியியல் நிபுணர் சரவணப் பெருமாள்ராஜா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 8 பேர் கொண்ட குழு கடந்த 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை 3 நாட்கள் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 350 கிலோ கொப்பரை மற்றும் திரிகளை எடுத்துச் செல்ல வேண்டும். 40 டன் எடையுள்ள சுமார் 450 கிலோ நெய்யையும் எடுத்துச் செல்ல வேண்டும். எனவே இவ்விரு பணிகளுக்கும் தேவையான அளவு ஆள்களை பயன்படுத்தி அசம்பாவிதம் ஏதும் இன்றி தீபத்திருவிழாவை சிறப்பாக நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். எனவே, சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் ஆள்பலத்தைப் பயன்படுத்தி தீபத் திருவிழா நடத்தப்படும்” என்று பதிலளித்தார்.