தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ம் கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நாகேஸ்வர சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ திருவிழாவை ஒட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பிரஹந்நாயகி ஸமேத நாகேஸ்வரசுவாமி திருக்கோயில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. இது தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். ஆதிசேஷன் இங்கு மாசி மாத மகா சிவராத்திரி நாளில் முதல் காலத்தில் வழிபாடு செய்து இழந்த தன் சக்தியை மீண்டும் பெற்றார் என தல வரலாறு கூறுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற இந்த ஆலயத்தில் பங்குனி உத்திர பிரமோற்சவம் பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதே போல இந்த ஆண்டுக்கான விழா, புதன்கிழமை காலை பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரத்தின் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு நந்தியம்பெருமான் பொறிக்கப்பட்ட திருக்கோடி மங்கள வாத்தியங்கள் இசைக்க, வேத மந்திரங்கள் முழங்க, ஏற்றப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நாள்தோறும் காலை, மாலையில் சூரியபிரபை, சந்திர பிரபை, பூத வாகனம், ஷேச வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது.
விழாவவையொட்டி வருகிற 6 ஆம் தேதி ரிஷப வாகனத்தில் ஓலைச்சப்பரமும், 8 ஆம் தேதி திருக்கல்யாணம், 10 ஆம் தேதி திருத்தேரோட்டம், 11 ஆம் தேதி பஞ்சமூர்த்திகளும் மகாமக குளக்கரையில் எழுந்தருள பங்குனி உத்திர தீர்த்தவாரி நடைபெறுகிறது..