சென்னை தி.நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் அறக்கட்டளையின் புதிய அலுவலக திறப்பு விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டனர். சூரியா மற்றும் கார்த்தியின் தாயார் லட்சுமி கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அகரம் அறக்கட்டளை நிறுவனர் சூர்யா பேசியதாவது:-
அகரம் அறக்கட்டளைக்கு தனிச்சிறப்பு வாய்ந்த அலுவலகக் கட்டிடம் திறப்பது பெரிய விஷயம். இந்தக் கட்டிடம் கல்விப் பணிகளைத் தொடர உத்வேகமாக அமையும். அகரம் பயணத்திற்கு ஆதாரமாக இருப்பவர்கள் தன்னார்வலர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்கள். அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். முற்போக்கான சமுதாயத்தை உருவாக்க விரும்பும் அனைவருடனும் இணைந்து பணியாற்ற அகரம் தயாராக உள்ளது.
அதன் ஒரு கட்டமாக இக்கட்டடத் திறப்பு விழாவுடன் பயிற்சிப் பட்டறைகள், நூல் வெளியீட்டு விழா, வாசிப்பு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இலவச ஆங்கில வகுப்புகள் மற்றும் அறிவுசார் நிகழ்வுகளும் இங்கு திட்டமிடப்பட்டுள்ளன. அகரம் மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் முன் பதிவு செய்து இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம். இந்த இடம் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான மையமாக தொடர்ந்து செயல்படும். இவ்வாறு சூர்யா கூறினார்.