சென்னை : தெலுங்கில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற கோர்ட் திரைப்படத்தை நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார். இந்த படம் ரூபாய் 60 கோடி வரை வசூல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் நானி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராம் ஜெகதீஸ் இயக்கத்தில் உருவான கோர்ட் – ஸ்டேட் விர்சஸ் நோபடி (court state vs a nobody) திரைப்படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றதுடன் ரூ. 60 கோடி வரை வசூலித்து வெற்றிப் படமானது.
இதில், பிரியதர்ஷி புலிகொண்டா, ரோகினி, ஹர்ஷா வரதன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். போக்சோ வழக்கால் பாதிக்கப்படும் இளைஞன், அவரை நிரபராதியாக்க வழக்கை நடத்தும் வழக்கறிஞர் என நீதிமன்றத்தை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகியிருந்தது.
தொடர்ந்து, சில நாள்களுக்கு முன் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் இப்படம் வெளியாகி பலரிடமும் ஆதரவைப் பெற்றது. இந்த நிலையில், நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து படத்தில் வழக்கறிஞராக நடித்த நாயகன் பிரியதர்ஷி புலிகொண்டாவுக்கு தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து பாராட்டியுள்ளனர்.
இதனால், உற்சாகமடைந்த பிரியதர்ஷி, “சூர்யா அண்ணா, ஜோதிகா மேடம் உங்களின் வாழ்த்தும் பூங்கொத்தும் என் உள்ளத்தை நிறைத்தது. வழக்கறிஞர் சந்துரு மற்றும் வெண்பாவிடமிருந்து வந்த வார்த்தைகளைப் பெற்றதுபோல் பெருமையாக இருக்கிறது. உங்களின் ஆசிர்வாதம் தேவை” எனப் பதிவிட்டுள்ளார்.