சென்னை: எனது வாழ்க்கையை படமாக எடுத்ததால் மிரட்டினர் என்று நடிகை சோனா ஓப்பன் டாக் விடுத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சோனா தனது வாழ்க்கையை ‘ஸ்மோக்’ என்ற பெயரில் வெப் தொடராக எடுத்து இருக்கிறார். அவரே இயக்கியும் உள்ளார். சோனா அளித்துள்ள பேட்டியில், ”நடிகையான பிறகு எனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து இந்த வெப் தொடரை எடுத்து இருக்கிறேன்.
வெப் தொடரை எடுக்கக்கூடாது என்று சிலர் மிரட்டினார்கள். எனது வீட்டிலும் சிலர் சுவர் ஏறி குதித்தனர். இதனால் பயந்து கதறி அழுதேன். பிரச்சினையில் இருந்து ஓடி ஒளிந்து கொண்டேன். ஆனாலும் தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்தன.
ஒரு கட்டத்தில் துணிந்து இறங்கி வெப் தொடரை எடுத்து முடித்தேன். முகேஷ், ஆஸ்தா, இளவரசு, ஜீவா ரவி, சர்மிளா, சோனியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த தொடரை படமாக்கியபோதும் சிலர் என்னை ஏமாற்றி பண மோசடி செய்தனர். தொடர் சிறப்பாக வந்துள்ளது. வாழ்க்கையை 8 எபிசோடுகளாக எடுத்துள்ளேன். யாரையும் பழிவாங்க இந்த தொடரை எடுக்கவில்லை.
தனி ஆளாக போராடி வருகிறேன். கவர்ச்சி வேடங்களில் நடிக்க எனக்கு அழைப்பு வருகிறது. இனிமேல் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். குணசித்திர வேடங்களில் மட்டுமே நடிப்பேன்” என்றார்.