சென்னை: சென்னையில் நடந்த 22வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்பட்ட ‘அமரன்’, ‘மகாராஜா’ உள்ளிட்ட படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடிகருக்கான விருது விஜய் சேதுபதிக்கும், சிறந்த நடிகைக்கான விருது சாய் பல்லவிக்கும் வழங்கப்பட்டது. இந்திய திரைப்பட விமர்சகர்கள் சங்கம் நடத்தும் 22-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
60 நாடுகளில் இருந்து 180 படங்கள் திரையிடப்பட்டன. திரைப்பட விழாவின் நிறைவு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நேற்று மாலை நடைபெறுகிறது. இதில், திரைப்பட இயக்குநர் பாக்யராஜ், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர் சங்கச் செயலர் டி.சிவா, திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி. உதயகுமார் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

சிறந்த திரைப்படப் பிரிவில் ‘அமரன்’ முதல் பரிசையும், ‘லப்பர் பந்து’ இரண்டாம் பரிசையும் பெற்றது. சிறந்த நடிகர் விஜய் சேதுபதி (மகாராஜா), சிறந்த நடிகை சாய் பல்லவி (அமரன்), சிறந்த ஒளிப்பதிவாளர் சி.எச். சாய் (அமரன்), சிறந்த படத்தொகுப்பு பிலோமின் ராஜ் (மகாராஜா), சிறந்த குழந்தை நடிகர் பொன்வேல் (வாழை), சிறந்த பொழுதுபோக்கு படம் வேட்டையான், நடிகர் அருள்நிதிக்கு அமிதாப் பச்சன் யூத் ஐகான் விருது, சிறந்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் (அமரன்) ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதேபோல், ‘ஜமா’ படத்துக்கு சிறப்பு ஜூரி விருது வழங்கப்பட்டது. குறும்படப் பிரிவில் சிறந்த படமாக கயாம் தேர்வு செய்யப்பட்டது. இந்திய திரைப்பட விமர்சகர்கள் சங்கத் தலைவர் சிவன் கண்ணன், துணைத் தலைவர் ஆனந்த் ரங்கசாமி, பொதுச் செயலாளர் ஏவிஎம்.கே. சண்முகம், இணைச் செயலாளர் சுரேஷ் மேனன், நடிகர் அரவிந்த் சுவாமி, இயக்குநர்கள் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், நடிகை துஷாரா விஜயன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.