சென்னை: பிரான்ஸ் நாட்டின் உயர்ந்த விருதான செவாலியே விருது கலை இயக்குனர் தோட்டா தரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அரசின் உயரிய விருதான ‘செவாலியே’ விருது புகழ்பெற்ற கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதை நாளை சென்னையில் உள்ள பிரான்ஸ் கலாசார மையத்தில் தோட்டா தரணி பெறுகிறார். இதையொட்டி தோட்டா தரணிக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரபல கலை இயக்குனர் தோட்டா தரணி அவர்களுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான “செவாலியே” அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கலை இயக்கத்தில் பல்வேறு மெச்சத்தக்க சாதனைகள் புரிந்த அவர்தம் மணிமகுடத்தில் இவ்விருது மற்றுமோர் நன்முத்தாய் ஜொலிக்கட்டும்! என்று கூறியுள்ளார்.