பெங்களூரு: இது குறித்து கர்நாடக திரைப்பட கூட்டமைப்பு தலைவர் நரசிம்மலு கூறுகையில், “கமல்ஹாசன், ‘நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அதனால் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்’ என்று உறுதியாகக் கூறுகிறார். ஆனால் அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், படத்தை வெளியிட அனுமதிப்பது என்ற கேள்விக்கே இடமில்லை.
திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, கர்நாடக அரசியல் தலைவர்களும் கன்னட அமைப்புகளும் அவரது அறிக்கையைக் கண்டித்துள்ளன. திரையரங்குகள் மற்றும் விநியோகஸ்தர்கள் ‘தக் லைஃப்’ படத்தைத் திரையிடுவதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்துள்ளனர். அவர் மன்னிப்பு கேட்டாலும், அதை உடனடியாக வெளியிட அனுமதிக்க மாட்டோம்,” என்று நரசிம்மலு கூறினார். இதற்கிடையில், கமல்ஹாசன் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம் இன்டர்நேஷனல் சார்பாக நேற்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தார்.

அதில், “கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது சட்டத்திற்கு எதிரானது. எனவே, தடையை நீக்கி, படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டும். திரையரங்குகளுக்கு போதுமான போலீஸ் பாதுகாப்பு வழங்க கர்நாடக அரசுக்கும், காவல்துறைக்கும் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிரத்னம் இயக்கத்தில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் நடித்த ‘தக் லைஃப்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.
கன்னட நடிகர் சிவராஜ் குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், “கர்நாடகாவில் உள்ள அந்த ஊரில் கன்னட நடிகர் ராஜ் குமாரின் குடும்பம் எனது குடும்பம். கன்னடம் தமிழிலிருந்து பிறந்தது. நீங்களும் (சிவராஜ் குமார்) அதை ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்” என்றார். கர்நாடகாவில் கமல்ஹாசனின் உரைக்கு கன்னட ரக்ஷண வேதிகே, கன்னட சலுவளி உள்ளிட்ட அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பெங்களூருவில் உள்ள ஷாப்பிங் மால்களில் வைக்கப்பட்டிருந்த ‘தக் லைஃப்’ படத்தின் விளம்பர பதாகைகளை அவர்கள் கிழித்து எறிந்தனர். இந்தப் படத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்றும், கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கக் கூடாது என்றும் கோரி சமூக ஊடகங்களில் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.