ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘குட் பேட் அக்லி’. கடந்த 10-ம் தேதி வெளியான இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இளையராஜா இசையமைத்த ‘ஒத்த ரூவா தாரே…’, ‘இளமை இதோ இதோ…’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’ ஆகிய பாடல்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இளையராஜாவின் பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக கூறி ‘குட் பேட் அக்லி’ படத்தின் தயாரிப்பாளருக்கு இளையராஜாவின் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது குறித்து தயாரிப்பாளர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ரவிசங்கர் விளக்கம் அளித்துள்ளார். “அந்தப் பாடல்களைப் பயன்படுத்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் நாங்கள் பின்பற்றியுள்ளோம். சம்பந்தப்பட்ட இசை நிறுவனங்களிடமிருந்து உரிய அனுமதிகளைப் பெற்றுள்ளோம். நாங்கள் அவர்களுக்கு பணம் செலுத்தியுள்ளோம். நாங்கள் தடையில்லாச் சான்றிதழையும் பெற்றுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

மேலும், “இளையராஜாவிடம் இருந்து இதுவரை எங்களுக்கு எந்த நோட்டீசும் வரவில்லை. அவர் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. நோட்டீஸ் கிடைத்ததும் எங்கள் வழக்கறிஞர் குழு அதை கையாளும்” என்று அவர் மேலும் கூறினார்.