சென்னை: அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில், தனது படங்களில் இடம் பெற்ற பாடல்கள் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டதாக கூறி, இயக்குநர் கஸ்தூரிராஜா சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘குட் பேட் அக்லி’ படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இதில் வில்லனாக அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார். படத்தில் பழைய பாடல்களை மீளமைத்து, நடனக்காட்சிகளில் பயன்படுத்தியிருந்தனர். குறிப்பாக “ஒத்த ரூபா தாரேன்”, “தூதுவளை இலை அரைச்சு”, “பஞ்சு மிட்டாய் சேலை கட்டி” போன்ற பாடல்கள் இருந்தன. இவை இயக்குநர் கஸ்தூரிராஜா இயக்கிய படங்களில் இடம்பெற்றவை.
இவை குறித்து அனுமதி பெறவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார் கஸ்தூரிராஜா. இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பழைய பாடல்களை மரியாதையாக கேட்டாவது பயன்படுத்தியிருக்கலாம். இப்போது இசையமைப்பாளர்கள் குறைவாக இருப்பதால் பழைய பாடல்களையே எல்லோரும் ரீயூஸ் செய்கிறார்கள். இது தவறான வழக்கமாக மாறிவிடக்கூடாது” என கூறியுள்ளார்.
இதை முன்னதாக இசைஞானி இளையராஜாவும் குற்றம் சாட்டி, ரூ.5 கோடி நஷ்டஈடு கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ், தேவையான உரிமங்களை வாங்கியிருந்தோம் என விளக்கம் அளித்தது. அதே பதிலை கஸ்தூரிராஜாவுக்கும் வழங்கப்போவதாக தற்போது எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கஸ்தூரிராஜாவின் இந்தப் பேட்டிக்கு சில ரசிகர்கள் எதிர்வினையளித்து, “ஏற்கனவே அனுமதியுடன் தான் பயன்படுத்தியதாக சொன்னார்களே, இப்போ நீங்கள் ஏன் வழக்குப் பதிவு செய்யப் போகிறீர்கள்?” என கேள்வி எழுப்பி உள்ளனர்.
‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி, ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இது இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு மிகப்பெரிய வெற்றியை அளித்திருக்கிறது. அஜித் ரசிகர்கள், ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரண்டு வெற்றிப் படங்களின் பூரிப்பில் இருக்கிறார்கள்.
தற்போது சினிமாவில் இருந்து சிறிய இடைவேளை எடுத்துள்ள அஜித் குமார், கார் ரேசிங் போட்டிகளில் முழு மனதுடன் ஈடுபட்டு வருகிறார். நவம்பர் மாதம் வரை கார் ரேசிங் தொடரும் எனத் தெரிகிறது. பின்னர் தான் அடுத்த படம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கஸ்தூரிராஜாவின் குற்றச்சாட்டுகள், விஜய்யின் ‘ஜனநாயகன்’ அப்டேட் தாமதம் போன்றவை, தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து பேசப்படும் முக்கிய நிகழ்வுகளாக இருக்கின்றன.