சென்னை: நீளிரா படம் போரை விரும்பாதவர்களுக்கான படம் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
நவீன் சந்திரா நடிப்பில், சோமீதரன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘நீளிரா’. இதனை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு சிவா பத்மயன் இசையமைத்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர்ச் சூழலில், ஒரு திருமணம் நடைபெறுவதற்காகக் காத்திருக்கும் மணமக்கள் மற்றும் இரு வீட்டார் எதிர்கொள்ளும் சவால்களை மையமாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ‘நீளிரா’ படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
இந்த நிலையில், ‘நீளிரா’ படம் குறித்து நெகிழ்ச்சி வீடியோவை நடிகர் சூர்யா வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் சூர்யா கூறியிருப்பதாவது: நீளிரா என்றால் நீண்ட இரவு என்று அர்த்தம். சம காலத்தில் நடைபெறும் போர்களால் நம்முடைய அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதில் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுவது சாதாரண, எளிய மக்கள் தான்.
ஒரு போர் சூழலில் ஒரு கல்யாணம் நடக்கிறது, அந்த இரவை எப்படி கடக்கிறார்கள், எத்தனைப் பேர் பிழைக்கிறார்கள் என்பதை எமோஷனல் த்ரில்லர் ஆக இந்தப் படம் இயக்கப்பட்டிருக்கிறது அந்த இரவை உணர்ந்தவர், அந்த இரவை கடந்தவரே இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார்.
இலங்கை தமிழர் நண்பர் சோமிதரன். கடந்த கால போர், இப்ப இருக்கிற சூழல் இதற்கெல்லாம் ஒரு மவுன சாட்சியா இந்தப் படம் நம் எல்லோர் மனசிலும் நிலைச்சு இருக்கும்னு நான் நம்புறேன். இது போரை விரும்பாதவர்களுக்கான படம் என்று கூறியுள்ளார்.