சென்னை: சூர்யா 45 குறித்து முக்கிய அப்டேட்டை தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
ரெட்ரோ படத்தையடுத்து சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இதனால் சூர்யா 45 என அழைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும் இப்படம் குறித்த தகவலை படக்குழு வெளியிடாமல் வைத்திருந்தது.
இந்த நிலையில் இப்படத்தை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எஸ்.ஆர். பிரபு படம் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.
இப்படம் குறித்து அவர் கூறுகையில் “இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையும். படம் நன்றாக வந்துள்ளது. ஜூன் 2ஆவது அல்லது 3ஆவது வாரத்தில் இருந்து வரிசையாக படம் குறித்து அப்டேட் வந்து கொண்டிருக்கும். இது முற்றிலும் கொண்டாடக்கூடிய படமாக இருக்கும். ஆகவே, படத்தை பண்டிகை தினத்தில் வெளியிடுவோம்” என்றார்.
பண்டிகை நாள் என்றால் தீபாவளியா? என்ற கேள்விக்கு, அப்டேட் வரிசையாக கொடுக்கப்படும் எனத் தெரிவித்தார். பண்டிகை என்பதால் சுதந்திர தினம், ஆயுதபூஜை, தீபாவளி அல்லது கிறிஸ்துமஸ் நாளில் படம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது.