இந்திய டெரிடோரியல் ஆர்மியில் லெப்டினன்ட் கர்னலாக இருக்கும் பிரபல நடிகர் மோகன்லால், சனிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டை அடைந்து, தனது ராணுவ சீருடையை அணிந்து கொண்டு, பேரிடர் பாதித்த பகுதியின் மறுவாழ்வுப் பணிகளுக்காக மூன்று கோடி ரூபாய் அளித்தார்.
கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக வயநாடு மாவட்டத்தில் மலைப் பகுதிகளில் அமைந்துள்ள சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 340 பேர் உயிரிழந்துள்ளனர்.
250 பேரை காணவில்லை என்பதால், மீட்பு குழுவினர் களம் இறங்கி, மண்ணில் புதைந்துள்ள இறந்தவர்களின் உடல்களை மீட்டு வருகின்றனர். திரையுலக பிரபலங்களும் வயநாடு மக்களுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.
சிலர் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுகிறார்கள். இந்நிலையில், கேரள திரையுலகில் சூப்பர் ஸ்டார் மோகன்லால், கவுரவ கர்னல் என்ற சூழலில், ராணுவ உடையில் வயநாடு மக்களை சந்தித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். 3 கோடி நிதியுதவியும் அளித்துள்ளார்.