சென்னை: ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி பாடிய ‘முத்தமழை’ பாடல் ரசிகர்களை மெய் மறக்க வைத்தது. சமூக வலைதளங்களில் எந்த பக்கம் சென்றாலும், இந்த பாடலை ரசிகர்கள் பெருமையாக கேட்டு வருகிறார்கள். சினிமா உலகில் இத்தனை காலம் சின்மயி தமிழ் பாடல்களில் இருந்து விலகியிருப்பதற்கு என்ன காரணம்? அவருக்கு பாட தடை ஏன் விதிக்கப்பட்டது? என்ற கேள்விகள் நெட்டிசன்களின் மனதில் எழுந்து வருகின்றன. இதற்கு நடிகர் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கத் தலைவர் ராதா ரவி விளக்கம் அளித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த ‘தக் லைஃப்’ படம் ஜூன் 5-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை சாய் ராம் கல்லூரியில் நடந்தது. இதில் பாடகி சின்மயி ‘முத்தமழை’ பாடலை பாடி பெரும் வரவேற்பை பெற்றார். இந்த பாடலை ‘தக் லைஃப்’ படத்தில் ‘தீ’ பாடியுள்ளார். ஆனால் தீ பாடியதைவிட சின்மயி பாடியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சினிமாவில் சின்மயி பாட தடை விதிக்கப்பட்டது என்று சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்படுகிறது. இதற்கு நடிகர் ராதா ரவி விளக்கம் அளித்துள்ளார். சின்மயி தமிழ் படங்களில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு டப்பிங் செய்துள்ளார். இந்தப் பணிக்காக டப்பிங் யூனியனுக்கு வருடாந்திர சந்தா கட்ட வேண்டும். ஆனால் சின்மயி அந்த சந்தாவை கட்ட மறுத்ததாகவும், இதனால் தடை விதிக்கப்பட்டதாகவும் ராதா ரவி கூறியுள்ளார். மேலும், அவர் சந்தா கட்டவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு சின்மயி நீதிமன்றத்தை சென்றது, அங்கே சந்தாவை கட்டிவிட்டதாக பொய் தெரிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ராதா ரவி தங்கள் பேட்டியில், “இதைப் போன்ற தேவையற்ற பிரச்சனைகளை விட்டு நீங்களே ஒழுங்காக நடந்து கொண்டால் கலைஞர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும்” என்று கூறியபோதும், தொடர்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்க தேவையில்லை என பேட்டியை நிறுத்தி வெளியேறியுள்ளார்.
இதனால் தமிழ் சினிமாவில் சின்மயி மீண்டும் பாட முடியாமலிருப்பதற்கான காரணங்கள் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள் இந்த பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படுமா என கவலை படுகின்றனர்.