
ராமாயணக் கதையை ‘ராமாயணம்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கிறார்கள். இதன் முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படம் குறித்து முதன்முறையாக ரன்பீர் கபூர் பேசியுள்ளார். ரெட் சீ திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக ரன்பீர் கபூர் கலந்து கொண்டார். திரைப்பட விழாவில், அவரது அடுத்த படங்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
இதற்கு ரன்பீர் கபூர், “நான் தற்போது ‘ராமாயணம்’ படத்தில் நடித்து வருகிறேன். இது மிகப் பெரிய கதை. எனது நண்பர் நமித் மல்ஹோத்ரா தயாரிக்கிறார். உலகம் முழுவதிலுமிருந்து பெரும் குழுவினருடன் ராமாயண புத்தகத்தை ஆர்வத்துடன் உருவாக்கி வருகிறார். இதை நிதேஷ் திவாரி இயக்குகிறார். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.

முதல் பாகத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. அந்தக் கதையில் ராமராக நடிப்பது பெருமையாக இருக்கிறது. இது எனக்கு ஒரு கனவு. இந்திய கலாசாரம், குடும்ப உறவுகள், கணவன்-மனைவி உறவு என அனைத்து கூறுகளையும் கொண்ட படமாக ‘ராமாயணம்’ இருக்கும்,” என்றார் ரன்பீர் கபூர்.
நமித் மல்ஹோத்ரா மற்றும் யாஷ் இணைந்து தயாரிக்கும் படம் ‘ராமாயணம்’. ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ், சன்னி தியோல் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை நித்தேஷ் திவாரி இயக்கியுள்ளார். முதல் பாகம் 2026 தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கும் வெளியாகும்.