சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணைந்து உருவாக்கிய ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியானது மே 1ஆம் தேதி. படம் வெளியாகி இரு வாரங்கள் கடந்த நிலையில், அதன் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம் மற்றும் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். புதிய இயக்குநர்–நடிகர் கூட்டணியாக உருவான இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது.

திரைப்படம் வெளியானதும் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ஆனால் சூர்யா ரசிகர்கள் திரைப்படத்தை உற்சாகமாக வரவேற்றனர். ஆரம்பத்தில் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால், ரிலீஸான ஐந்தே நாட்களில் ‘ரெட்ரோ’ திரைப்படம் உலகளவில் ரூ. 100 கோடியைத் தாண்டியதாக அறிவிக்கப்பட்டது. தற்போது இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகளவில் படத்தின் மொத்த வசூல் ரூ. 110 கோடியை எட்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுவரை படக்குழுவிடமிருந்து அதிகாரபூர்வமான வசூல் தகவல் வெளியிடப்படவில்லை. கடந்த ‘கங்குவா’ திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத நிலையில், ‘ரெட்ரோ’ சூர்யாவிற்கு மீண்டும் ஒரு ஹிட் வழங்கியிருக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் சூர்யாவின் ரசிகர்கள் பெரிதும் உற்சாகமடைந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சூர்யா நடித்துக் கொண்டிருக்கும் ஆர்.ஜெ பாலாஜியின் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தில் வெளியாவது உறுதியாகும் என கூறப்படுகிறது.