ஹைதராபாத்: 2023-ம் ஆண்டு தனது தயாரிப்பு நிறுவனமான ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸைத் தொடங்கிய சமந்தா, ‘இந்த தளத்தின் மூலம், சமூக கட்டமைப்பில் இருக்கும் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் சிக்கலான கதைகளைப் பற்றி நாம் பேசலாம்’ என்று கூறியிருந்தார். இந்த சூழலில், சமந்தாவின் தெலுங்கு திரைப்படமான ‘சுபம்’ வரும் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது. ஒரு தயாரிப்பாளராக தனது அனுபவத்தைப் பற்றி சமந்தா பின்வருமாறு பேசியதாவது:
நிறைய ரிஸ்க் எடுக்காமல் வாழ்க்கையில் எந்த அர்த்தமுள்ள மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. பெரிய ஆபத்துகளை எடுப்பதில் இருந்து நான் ஒருபோதும் பின்வாங்கியதில்லை. நான் எடுத்த ரிஸ்க் பெரும்பாலும் எனக்கு நல்ல பலனைத் தந்துள்ளன. 15 வருட திரைப்படத் தயாரிப்பில் நான் கற்றுக்கொண்ட பல விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு, நான் சொல்ல விரும்பும் கதைகளை அணுகுவதற்கான நுண்ணறிவு மற்றும் அனுபவத்தைப் பெற்றுள்ளேன் என்று நம்புகிறேன். நான் ஒரு நடிகையாக இருப்பதை ரசிக்கிறேன் என்றாலும், திரைப்படத் தயாரிப்பிலும் கற்றலின் ஒரு பகுதி என்று நினைக்கிறேன்.

ஒரு தயாரிப்பாளராக இருப்பதால், திரைப்படத் தயாரிப்பின் ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அதில் நம்பமுடியாத திருப்தி இருக்கிறது. ஒரு நடிகையாக இருந்து நான் கற்றுக்கொண்டதை விட, இந்தப் படத்தைத் தயாரிப்பதன் மூலம் நான் அதிகம் கற்றுக்கொண்டேன். கற்றுக்கொள்ளவும் பங்களிக்கவும் இன்னும் நிறைய இருக்கிறது. எனவே, ஒரு குறிப்பிட்ட வகை படங்களுக்குள் என்னை மட்டுப்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை.
பரந்த அளவிலான கதைகளைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன். ஆனால், ஒரு பெண்ணாக, நான் எந்த வகையான கதைகளால் ஈர்க்கப்படுகிறேன், எந்த வகையான கதைகளை உருவாக்க விரும்புகிறேன் என்பதை எனது சொந்த அனுபவத்தின் மூலம் தீர்மானிப்பேன்.