சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்கவுள்ள மூன்று புதிய படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. இதில் முதல் படமாக, இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் சிம்புவின் 49-வது திரைப்படம் உருவாக உள்ளது. ஆனால், தற்போது வரை படத்தின் திரைக்கதை முழுமையாக தயார் செய்யப்படாத காரணத்தால், இதன் படப்பிடிப்பு மே மாதத்தில்தான் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தில் சிம்புவுடன் நடிகர் சந்தானமும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இதை சந்தானம் தற்போது ஒரு நேர்காணலின் போது உறுதிப்படுத்தியுள்ளார். “ஒரு நாள் சிம்பு என்னை அழைத்து, ‘நான் பண்ணும் ஒரு படத்தில் நீங்களும் இருக்க வேண்டும்’ என்றார். அவருக்கு நான் எப்போதும் ‘இல்லை’ என்று சொல்ல முடியாது. எப்போதும் அவரை நான் ஒரு சிறப்பான இடத்தில் வைத்திருப்பேன்” என சந்தானம் கூறியுள்ளார்.
மேலும், “அந்த தேதிகளில் நான் ஏற்கனவே வேறொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தேன். ஆனால் சிம்புவோடு நடிக்க முடிவு செய்த பிறகு, அந்த தயாரிப்பாளரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு இப்புதிய திட்டத்தில் கலந்துகொள்கிறேன்” என அவர் கூறியுள்ளார். இந்த புதிய கூட்டணி ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.