துரை செந்தில்குமாரின் அடுத்த படத்தில் சசிகுமாரும், விஜய் சேதுபதியும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ‘கருடன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ‘லெஜண்ட்’ சரவணன் நடிக்கும் படத்தை துரை செந்தில்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது முடியும் என்று தெரியவில்லை.

இதற்கிடையில் துரை செந்தில்குமார் தனது அடுத்த படம் குறித்து முடிவு செய்துள்ளார். ‘கருடன்’ படத்தைப் போலவே தனது அடுத்த படத்திலும் இரண்டு முக்கிய கேரக்டர்களை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார். இதற்காக விஜய் சேதுபதி, சசிகுமார் இருவரிடமும் பேசியுள்ளார்.
இருவரும் சம்மதம் தெரிவித்ததால் அதற்கான வேலைகளை தொடங்கியுள்ளார். இந்தப் படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் முடிவாகவில்லை. ‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’, ‘பட்டாஸ்’, ‘கருடன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். இவர் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக நீண்ட காலம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.