சென்னை: வைரமுத்துவின் ஆதங்கம்… தான் எழுதிய பல்லவி வரிகள் படத் தலைப்புகளாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறியிருக்கும் கவிஞர் வைரமுத்து, இணையத்தில் தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர்கள் கங்கை அமரன், கஸ்தூரி ராஜா வரிசையில் காப்புரிமை விவகாரம் தொடர்பாக வைரமுத்துவும் கேள்வி எழுப்பியுள்ளார். தான் இசையமைத்த பாடல்களை தன்னிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தக்கூடாது என எப்போதுமே கறாராக இருப்பவர், இசையமைப்பாளர் இளையராஜா. காப்புரிமை விவகாரம் பற்றி பேசும் ஒவ்வொரு முறையும், அவர் இணையதளங்களில் அதிக விமர்சனங்களுக்கு உள்ளாவார்.. அவரைத் தொடர்ந்து திரை நட்சத்திரங்கள் பலர் இவ்விவகாரத்தை கையிலெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து, காப்புரிமை தொடர்பான மனக்குமுரல்களை வெளிப்படுத்தியுள்ளார். தனது பல்லவி வரிகள் பல, திரைப்பட தலைப்புகளாக பயன்படுத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். சொல்லாமல் எடுத்துக் கொண்டதற்காக யாரையும், தான் கடிந்து கொண்டதில்லை என்றும் காணும் இடங்களில் அவர்களிடம் கேட்டதில்லை எனவும் பதிவிட்டுள்ளார்.
என்னை ஒருவார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது நாகரிகம் ஆகாதா என வினவியுள்ள வைரமுத்து, உதவியாக கேட்டால் நல்ல தமிழில் தலைப்பு வைக்க சம்பளம் இன்றி பணியாற்றுவதகாவும் கூறியுள்ளார்.
வைரமுத்துவுக்கு முன்னதாக இதேபோன்றதொரு குற்றச்சாட்டை முன்வைத்தார், இயக்குநர் கஸ்தூரி ராஜா. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் ஒத்த ரூபாய் தாரேன் பாடல் பயன்படுத்தப்பட்டதாகவும், பாடலாசிரியர் என்ற முறையில் தனது பெயர் கூட பட்டியலில் இடம்பெறவில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.. தனது எழுத்தில் இளையராஜாவின் இசையில் பிரபலமான இந்த பாடலை கேட்கும், இன்றைய இளைஞர்கள், இது குட் பேட் அக்லி படத்தின் பாடல் என்றே புரிந்துகொள்வார்கள் என்றும் கஸ்தூரி ராஜா கூறினார்…
7 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு இசையமைப்பவரின் பாடலை விட, தங்களின் பாடலுக்கே திரையரங்கில் கைதட்டல்கள் கிடைப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார், இயக்குநர் கங்கை அமரன்.. ஆனால், இந்த விவகாரத்தில் எல்லா கலைஞர்களின் கருத்துகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் பயன்படுத்தப்பட்ட மம்பட்டியான் பாடல் குறித்து, இயக்குநரும், நடிகருமான தியாகராஜன் கருத்து தெரிவித்தார். பழைய பாடலை இந்த காலகட்டத்து ரசிகர்களிடம் கொண்டு சேர்ந்த படக்குழுவுக்கு நன்றி தெரிவித்ததோடு, தாம் தான் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றும் கூறினார். இசையமைப்பாளர் தேவாவும் தன் பாடல்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஏற்கெனவே கூறியுள்ளார்.
காப்புரிமை விவகாரத்தில் கலைஞர்களுக்கு இடையே எழுந்துள்ள ஆதரவும், எதிர்ப்பும் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.