
நடிகர் விஷால் தனது நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரிக்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸிடம் கடனாக பெற்ற 21.29 கோடி ரூபாயை, லைகா நிறுவனம் ஏற்று செலுத்தியது. இந்த தொகையை திருப்பிச் செலுத்தும் வரை, விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகாவிடம் இருக்கும் என ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த ஒப்பந்தத்தை மீறி விஷால் படங்களை வெளியிட்டதாகக் கூறி, லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விஷால் 15 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும், தொகையை செலுத்தாத வரை அவரது படங்களை திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியிடக் கூடாது என்றும் தற்காலிகத் தடையுத்தரவு பிறப்பித்தது.

விசாரணைக்குள், விஷால் சொத்து விவரங்களை தாக்கல் செய்யாததும், பணம் செலுத்தாததுமான காரணங்களால், அவரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகிய விஷால், தனிடம் 3 கார்கள், ஒரு பைக் இருப்பதாகவும், இரண்டு வங்கி கணக்குகளின் விவரங்களையும், வீட்டுக்கான கடன் விவரங்களையும் தாக்கல் செய்தார்.
இந்த விவகாரத்தை தொடர்ந்து, நீதிபதி பி.டி.ஆஷா இன்று தீர்ப்பளித்தார். லைகா நிறுவனம் வழங்கிய தொகையான 21 கோடியே 29 லட்சம் ரூபாயை 30 சதவீத வட்டியுடன் விஷால் தரப்பே செலுத்த வேண்டும் எனவும், வழக்குச் செலவையும் அப்பக்கம் தர வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பால் விஷாலுக்கு நிதிச் சுமை அதிகரிக்கும் நிலையில், அவரது பட வெளியீடுகள் மேலும் தாமதமாவது உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது.