சென்னை: நயன்தாராவுடன் மோதல் என்ற தகவல்கள் திருஷ்டி எடுத்த மாதிரி உள்ளது என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.
நயன்தாரா ‘மூக்குத்தி அம்மன் 2-‘ம் பாகத்தில் நடித்து வருகிறார். சுந்தர்.சி இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் உதவி இயக்குனர் ஒருவர் நயன்தாராவிடம் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை விளக்கி சொன்னதாகவும் அப்போது நயன்தாரா இடைமறித்து உதவி இயக்குனரிடம் சில கேள்விகளை கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல் பரவியது.
இந்த மோதலை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும், நயன்தாராவுக்கு பதில் தமன்னாவை நடிக்க வைக்க யோசனை நடப்பதாகவும் பேசப்பட்டது. இதற்கு படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் குஷ்பு வெளியிட்ட அறிக்கையில், “சுந்தர்.சியின் நலம் விரும்பிகளுக்கு தெரிவிப்பது, மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து தேவையற்ற வதந்திகள் பரவி வருகின்றன. அது உண்மையல்ல. படப்பிடிப்பு திட்டமிட்டபடி சுமூகமாக நடந்து வருகிறது. சுந்தர்.சி எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். நயன்தாரா திறமையான நடிகை. அதை அவரே நிரூபித்து இருக்கிறார்.
நயன்தாரா கடந்த காலத்தில் நடித்த ஒரு கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்து வருகிறார். தற்போது பரவும் வதந்திகள் திருஷ்டி எடுத்த மாதிரி. நடப்பதெல்லாம் நல்லதுக்கே. உங்களின் ஆசிர்வாதம், அன்பை நம்புகிறோம். அடுத்த வெற்றிப்படத்துக்கு காத்திருங்கள்” என்று கூறியுள்ளார்.