சென்னை : டிராகன் படத்தின் கதாநாயகி கயாடு, தனது 2-வது தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அசாம் மாநிலம் தேஜ்பூரை சேர்ந்தவர் கயாடுலோஹர். இவர் கடந்த 2021-ம் ஆண்டு மனோரஞ்சன் நடிப்பில் வெளியான ‘முகில்பேட்டை’ என்ற கன்னட படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதனைத்தொடர்ந்து, 2022-ம் ஆண்டு வெளியான ஸ்ரீ விஷ்ணு நடித்த ‘அல்லூரி’ மூலம் தெலுங்கில் அறிமுகமானார். இந்த படம் வரவேற்பை பெறவில்லை. அதனையடுத்து அவருக்கு தெலுங்கு பட வாய்ப்பு வரவில்லை.
அதன்பின்னர் ஒரு மராத்தி மற்றும் மலையாளப் படத்தில் நடித்திருக்கிறார். இருந்தபோதும், அவரின் பெயர் அந்த அளவிற்கு வெளியில் தெரியவில்லை. தமிழில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக ‘டிராகன்’ படத்தில் நடித்தற்கு பிறகு மிகவும் பிரபலமாகி இருக்கிறார் கயாடு லோஹர். இதன் காரணமாக அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
அதன்படி தற்போது கயாடு, தனது 2-வது தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். மூன்று வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தெலுங்கில் நடிக்கிறார். கிஷோர் திருமலா இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் கயாடு ஒப்பந்தமாகியுள்ளதாக தெரிகிறது.