சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகை மேனகா மற்றும் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷின் மகள் ஆவார். மலையாளப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிய இவர் தமிழில் ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ரஜினி முருகன், பைரவா, சர்கார், ரெமோ, அண்ணாத்தா, ரகு தாத்தா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகை சாவித்திரியின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்ட தெலுங்குத் திரைப்படமான மகாநதி (தமிழில் ‘நடிகையர் திலகம்’) படத்திற்காக அவர் தேசிய விருதைப் பெற்றார். இதற்கிடையில், அவர் தனது பள்ளி நண்பரான ஆண்டனி தட்டில் என்பவரை 15 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

இரு வீட்டாரும் இவர்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததையடுத்து, திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 9.40 மணிக்கு கோவாவில் ஆண்டனி தட்டில் – கீர்த்தி சுரேஷ் திருமணம் நடந்தது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். திருமணத்திற்காக கோவா வந்திருந்த நடிகர் விஜய் மணமக்களை வாழ்த்தினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.