மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான தக் லைஃப் திரைப்படம், ரசிகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஜூன் 5ஆம் தேதி வெளியான இந்த படம் வசூலில் முற்றிலும் தோல்வியடைந்தது. தமிழ் சினிமாவின் முக்கிய ஆளுமைகள் கமலும் மணிரத்தினமும் இணைந்து இப்படம் எடுத்திருப்பது குறித்து அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்த நிலையில், எழுத்தாளர் J. தீபா, ஒரு யூட்யூப் சேனலுக்குத் தந்த பேட்டியில், இந்த படத்தின் தோல்விக்கான காரணங்களை விளக்கியுள்ளார். நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம்-கமல் இணைந்து மீண்டும் ஒரு திரைப்படத்தில் செயல்பட்டிருப்பது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால் திரைக்கதை திட்டமிடாமை, படத்தின் முக்கியமான காட்சிகள் கடைசி நேரத்தில் எடிட்டிங் டேபிளில் மாற்றப்பட்டதுதான் தோல்விக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
தீபா மேலும், கமலின் குணா, விருமாண்டி, தேவர் மகன் போன்ற படங்களில் திரைக்கதைக்கு இருந்த முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறார். அந்த படங்களில் எழுத்தாளர்கள் சுஜாதா, பாலகுமாரன் போன்றோரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருந்ததாகவும், அவர்கள் எழுதிய விபரமான, ஆழமான காட்சிகள் கதையை உயர்த்தியதாகவும் கூறினார்.
சுஜாதாவின் எழுத்து எப்போதும் அறிவியல் கலந்த சுவாரஸ்யத்துடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். எந்திரன் படத்தில் ஒரு ரோபோ காதலிக்கிறான் என்ற கருத்தை வித்தியாசமாகவும் நவீனமாகவும் சொல்லிய விதத்தை நினைவுகூர்ந்தார். ஆனால் 2.0 படத்தில் அந்த அழுத்தம் இல்லாதது அவரது பங்களிப்பு இல்லாததாலேயே என கருதுகிறார்.
தீபா குறிப்பிடுவதுபோல், இன்றைய திரைப்படங்களில் நல்ல திரைக்கதை ஆசிரியர்களுக்கு வாய்ப்பு இல்லை. இயக்குநராகவே தான் அவர்கள் வரவேண்டும் என்கிற கட்டுப்பாடு, சினிமாவுக்கு புதிய, வித்தியாசமான கதை சொல்லியை இழக்க வைத்துவிடுகிறது. திரைக்கதை இல்லாமல் வெறும் புகழின் பேரில் படம் எடுக்கப்படும் போது அந்த பயணம் வெற்றிகரமாக இருக்க முடியாது.
தக் லைஃப் போன்ற படங்களில், கமலும் மணிரத்னமும் திரைக்கதை பற்றிய கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என J. தீபா கூறி பேட்டியை முடித்துள்ளார்.